இந்தியா

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவியைக் கடத்தியவர் கைது

webteam

பெங்களூருவில் பத்தாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியைக் கடத்திய ஒருவரை போலீசார் கைது செய்தனர். 

பெங்களூரு உதயாநகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இவரது மாமாவின் நண்பர் மகன் ரஞ்சித் என்பவர் சிறுமியை காதலிப்பதாக தொடர்ந்து சில மாதங்களாக துன்புறுத்தியதாக தெரிகிறது. இதை ஏற்க மறுத்த சிறுமி தனது அப்பாவிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து ரஞ்சித்தை சிறுமியின் பெற்றோர் கண்டித்துள்ளனர். மேலும் பத்தாம் வகுப்பு தேர்வு நெருங்கியதால் சிறுமியை அவரது அக்கா வீட்டில் தங்கி படிக்கும்படி பெற்றோர் அறிவுறுத்தியிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் எப்படியும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத பள்ளிக்கு வந்துதான் ஆக வேண்டும் என்று தெரிந்து கொண்டு அங்கு வந்த சிறுமியைக் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

தேர்வு முடிந்து உறவினர்கள் சிறுமியை அழைக்க வந்தபோது அவர் பள்ளியில் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் ரஞ்சித்தை கைது செய்து சிறுமியை பத்திரமாக மீட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் இந்திய குற்றவியல் பிரிவு 363 ன் கீழ் கடத்தல் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.