இந்தியா

கழுகை காப்பாற்ற முயற்சித்தபோது வேகமாக வந்த கார் மோதி விபத்து! இருவர் பரிதாப பலி!

ச. முத்துகிருஷ்ணன்

மும்பையில் காருக்கடியில் சிக்கிய கழுகை காப்பாற்ற முயற்சித்தபோது, வேகமாக வந்த மற்றொரு கார் மோதியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மும்பையைச் சேர்ந்த 43 வயதான அமர் மணீஷ் ஜரிவாலா மே 30 அன்று பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பு பாதை வழியாக சென்று கொண்டிருந்தபோது கழுகு அவரது காரின் கீழ் வந்தது. ஜரிவாலா தனது டிரைவரான ஷியாம் சுந்தரிடம் காரை நிறுத்தச் சொன்னார். காயமடைந்த பறவையை மீட்க இருவரும் காரிலிருந்து இறங்கினர்.

இருவர் வாகனத்தின் அடியில் இருந்து கழுகை வெளியே இழுக்க முயன்றபோது, அருகில் உள்ள பாதையில் வேகமாக வந்த டாக்சி ஒன்று அவர்கள் மீது மோதியது. மோதிய வேகத்தில் ஜரிவாலா மற்றும் சுந்தர் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். ஜரிவாலா சம்பவ இடத்திலேயே இறந்த நிலையில், காமத் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

வொர்லி போலீசார் விபத்து ஏற்படுத்திச் சென்ற டாக்சி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த பயங்கர விபத்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது.