இந்தியா

''இசட் பிளஸ் பாதுகாப்புடன் பணப் பெட்டிகளை எடுத்துச்செல்கிறது பாஜக'' - மம்தா பானர்ஜி

''இசட் பிளஸ் பாதுகாப்புடன் பணப் பெட்டிகளை எடுத்துச்செல்கிறது பாஜக'' - மம்தா பானர்ஜி

webteam

பாஜக தலைவர்கள் இசட் பிளஸ் பாதுகாப்புடன் பணப் பெட்டிகளை எடுத்துச் சென்று, ஓட்டுக்கு பணம் கொடுத்து வருவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.

பர்கானாஸ் மாவட்டம் அசோக்நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, மேற்கு வங்கம் கட்டால் தொகுதி பாஜக வேட்பாளர் பாரதி கோஷின் காரில் இருந்து ரூ.1.13 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இசட் பிளஸ், ஒய் பிளஸ், பிஜேபி பிளஸ், பாதுகாப்பு வைத்திருக்கும் பாஜக தலைவர்கள் பலர் தங்களின் பாதுகாப்பை பயன்படுத்தி போலீஸ் வாகனத்திலேயே கட்டுக்கட்டாக பணம் அடுக்கப்பட்டுள்ள பெட்டிகளை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். 

தேர்தல் முன்பு, சமூக எதிர்ப்பாளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுச்சாவடிகளை பாஜகவினர் கைப்பற்ற சொல்லி உள்ளனர் எனவும் இது தேர்தலா? எனவும் மம்தா கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் எந்த பத்திரிகையையும் போட்டோகிராபரையும் பிரதமர் இருக்கும் இடத்தில் ஏன் அனுமதிக்கவில்லை என கேள்வி எழுப்பிய அவர், ஒரு பெட்டி எடுத்துச் செல்லப்பட்டதாக ஒரே ஒரு போட்டோ மட்டும் வெளிவந்தது எனவும் பாஜக தலைவர்களால் இதுபோல் எத்தனை பெட்டிகளில் பணம் செல்கிறதோ என யாருக்கு தெரியும் எனவும் சாடினார். 

மேற்குவங்கத்தில் உங்களால் பணப்பெட்டிகளை கொண்டு தேர்தல் நடத்த முடியாது எனவும் எந்த தலைவர் எங்கு பணப்பட்டுவாடா செய்தாலும் நாங்கள் கண்டுபிடித்து விடுவோம் எனவும் தெரிவித்தார். இரவில் பண பட்டுவாடா செய்தாலும் விழித்திருந்து பிடிக்கும்படி அறிவுறுத்தியுள்ளதாகவும் பிரசாரம் ஓய்ந்து விட்டதால் இரவுகளில் பணம் கொடுக்க பாஜகவினர் துவங்கி விட்டனர் எனவும் மம்தா குற்றம் சாட்டினார். 

மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், ''காரில் பணம் சிக்கிய விவகாரத்தில் சட்டம் அதன் கடமையை செய்யும்” எனத் தெரிவித்துள்ளார். பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா, பாரதி கோஷிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் இந்த விவகாரத்தை பாரதி கோஷிற்கு எதிராக கட்டமைக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.