இந்தியா

மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையே டெல்லி வன்முறைக்கு காரணம்: மம்தா பானர்ஜி

Veeramani

மத்திய அரசின் பொறுப்பற்ற அணுகுமுறை மற்றும் விவசாயிகளிடம் காட்டிய பாரபட்சமே டெல்லி வன்முறைக்கு காரணம் என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ட்வீட் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “டெல்லியில் நடந்த கவலை மற்றும் வேதனையான சம்பவங்களால் மிகுந்த கலக்கமடைந்துள்ளேன். எங்கள் விவசாய சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் மீதான மத்திய அரசின் பொறுப்பற்ற அணுகுமுறையும், அலட்சியமும்தான் இந்த நிலைமைக்கு குற்றம்சாட்டப்பட வேண்டும்.

முதலாவதாக, விவசாயிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தாமல் இந்த சட்டங்கள் இயற்றப்பட்டன. கடந்த 2 மாதங்களாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் முகாமிட்டிருந்தபோதிலும், மத்திய அரசு அவர்களைக் கையாள்வதில் மிகவும் சாதாரணமாக இருந்தனர். உடனடியாக மத்திய அரசு விவசாயிகளுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும் மற்றும் கடுமையான மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்