இந்தியா

“மேற்குவங்க அரசின் தகவல்களை மத்திய அரசிடம் பகிர வேண்டாம்”- மம்தா பானர்ஜி

“மேற்குவங்க அரசின் தகவல்களை மத்திய அரசிடம் பகிர வேண்டாம்”- மம்தா பானர்ஜி

Rasus

மேற்குவங்க அரசின் முக்கிய தகவல்களை மத்திய அரசிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அரசு அதிகாரிகளை முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து கணினிகளிலும் சேகரிக்கப்படும் விவரங்களை கண்காணிக்கவும், பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை இடைமறித்து பார்க்கவும், அதனை தடுக்கவும் 10 பாதுகாப்பு அமைப்புகளுக்கு சமீபத்தில் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதற்கு முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் மேற்குவங்க அரசின் முக்கிய தகவல்களை மத்திய அரசிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அரசு அதிகாரிகளை முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார். மேற்குவங்க மாநிலத்தின் சவுத் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அரசு அதிகாரிகளிடம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினர். அப்போது, தகவல் சேமிப்புக்காக மத்திய அரசிடம் மாநில அரசின் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

அனைத்து மாநில அரசுகளின் தகவல்களை அணுகும் மத்திய அரசு அதனை அரசியல் ரீதியாக பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாநில அரசுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள மாநில அரசின் போர்டலில் அனைத்து தகவல்களையும் சேகரித்து கொள்ளலாம் என்றும் தகவல் சேகரிப்பு காரணத்தை காட்டி மத்திய அரசிற்கு முக்கிய தகவல்களை அனுப்ப வேண்டாம் எனவும் அதிகாரிகளை மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார். மேற்குவங்கத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் தகவல்களை பயன்படுத்திக் கொள்ளும் மத்திய அரசு, அவர்களுக்கு நிதி ஒதுக்குவதில்லை எனவும் சாடியுள்ளார். அத்துடன் கூட்டாட்சி அமைப்பில் மத்திய அரசு நேரடியாக தலையிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ள மம்தா பானர்ஜி, இது சரியான நடைமுறையில்லை என்றும் தெரிவித்துள்ளார். மத்திய அரசை போல மாநில அரசும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.