மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி நீலம்பென் பாரிக் (Neelamben Parikh) குஜராத் மாநிலம் நவ்சாரியில் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 92.
இந்தியாவின் விடுதலைக்காக போராடியவர்களில் மகாத்மா காந்தியும் ஒருவர். இவருடைய மூத்த மகன் ஹரிலால் காந்தி. இவருடைய மகள் ரமிபென்னுக்கு மகளாகப் பிறந்தவர் நீலம்பென். காந்தியக் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்ட நீலம்பென் பழங்குடிப் பெண்களின் முன்னேற்றத்துக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்தவர்.
1955இல் பம்பாயில் பட்டப்படிப்பை நிறைவு செய்த நீலம்பென், தனது கணவர் யோகேந்திரபாயுடன் கிராமப் பகுதிகளில் பணியாற்றச் சென்றார். வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தில் இந்தத் தம்பதியினர் பங்கேற்றனர். குஜராத்தில் ஒரு குக்கிராமத்தில் பள்ளி ஒன்றைத் தொடங்கி நடத்திவந்தார். பழங்குடிப் பெண்களுக்கு கல்வியும் தொழிற்பயிற்சியும் அளித்து, அவர்களை பொருளாதாரத் தன்னிறைவு அடையச் செய்தார். ‘Gandhi’s lost jewel: Harilal Gandhi’ என்ற தலைப்பில் தனது தாத்தா ஹரிலால் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அதில் மகாத்மாவுக்கும் அவரது மூத்த மகனுக்கும் இடையிலான மோதல்கள் நிறைந்த உறவை விளக்கியிருந்தார். மகாத்மா காந்தி தனது மருமகள்களுக்கு எழுதிய கடிதங்களையும் இவர் நூலாகத் தொகுத்துள்ளார்.