மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வந்தது முதல், ஆட்சி அமைப்பத்தில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. அங்கு அதிக இடங்கள் பெற்ற பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால் போதிய ஆதரவு இல்லாததால் அதனை பாஜக நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதற்காக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
அத்துடன் ஆளுநரிடம் தங்களுக்கு ஆட்சி அமைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு சிவசேனா கோரிக்கை வைத்தது. எனினும் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி இதனை நிராகரித்தார். இதனையடுத்து நேற்று இரவு இவர் தேசிய வாத காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். இன்று இரவு 8.30 மணிவரை அவர்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் குடியரசு ஆட்சி அமைய பரிந்துரை செய்ததாக ஆளுநர் மாளிகை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “மகாராஷ்டிராவில் எந்தக் கட்சியுமே நிலையான ஆட்சியமைக்க இயலாததால். அரசியலமைப்புச் சட்டப்பிரவு 356-ன்படி மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பிரதமர் மோடி பிரேசில் நாட்டிற்கு செல்வதற்கு முன்பாக அவர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.