இந்தியா

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு - மகாராஷ்டிரா, ஹரியானாவில் ஆட்சி யாருக்கு?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு - மகாராஷ்டிரா, ஹரியானாவில் ஆட்சி யாருக்கு?

webteam

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதனையடுத்து, வரும் 24ம் தேதி, இரு மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை சில தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் மகாராஷ்டிராவை பொறுத்தவரை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், பாஜக 230 தொகுதிகளிலும் காங்கிரஸ் 48 தொகுதியிலும் மற்றவை 10 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா டுடே பத்திரிகை, பாஜக 166 லிருந்து 194 இடங்கள் வரையிலும், காங்கிரஸ் 72 லிருந்து 90 வரையிலும் மற்றவை 22 லிருந்து 34 இடங்கள் வரையிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. 

சிஎன்என் தொலைக்காட்சி, பாஜக 243 இடங்களிலும் காங்கிரஸ் 41 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. 

ரிபப்ளிக் டிவி, பாஜக 223 தொகுதிகளிலும் காங்கிரஸ் 54 தொகுதிகளிலும் மற்றவை 11 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணித்துள்ளது. 

ஏபிபி நியூஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 204 இடங்களிலும் காங்கிரஸ் 69 இடங்களிலும் மற்றவை 15 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது. 

இதேபோல், ஹரியானாவை பொறுத்தவரை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், பாஜக 71 தொகுதிகளிலும் காங்கிரஸ் 11 தொகுதியிலும் மற்றவை 8 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎன்என் தொலைக்காட்சி, பாஜக 75 இடங்களிலும் காங்கிரஸ் 10 இடங்களிலும் மற்றவை 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. 

நியூஸ் எக்ஸ், பாஜக 75 லிருந்து 80 இடங்கள் வரையிலும் காங்கிரஸ் 9 லிருந்து 12 வரையிலும் மற்றவை 1 லிருந்து 4 இடங்கள் வரையிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. 

ரிபப்ளிக் டிவி, பாஜக 52 லிருந்து 63 தொகுதிகள் வரையிலும், காங்கிரஸ் 15 லிருந்து 19 வரையிலும் தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணித்துள்ளது.