மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சி, கடந்த 2023ஆம் ஆண்டு முதல் இரு தரப்புகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், தேசியவாத காங்கிரஸின் இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், ஜனவரி 28ஆம் தேதி அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தார். இந்தச் சூழலில், ஒன்றிணைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே இருக்க வேண்டுமென, பாஜக விரும்புவதாக கூறப்படுகிறது. அப்படி நிகழ்ந்தால், சரத் பவார் அணியிலுள்ள 8 எம்.பிக்களின் ஆதரவு, தனிப்பெரும்பான்மை இல்லாத பாஜக அரசுக்கு கிட்டும்.
எனவே, அக்கட்சியை தங்கள் கூட்டணியில் வைத்திருக்க, ஒன்றிணைந்தாலும் தேசியவாத காங்கிரஸில் மறைந்த அஜித் பவார் அணியின் கையே ஓங்கி இருக்க வேண்டுமென பாஜக விரும்புவதாக தெரிகிறது. எனவேதான், அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் கட்சியையும், அதிகாரத்தையும் கைப்பற்றும் வகையில், அவரை பாஜக துணை முதல்வராக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையொட்டியே, தேசியவாத காங்கிரஸின் இரு அணிகளையும் ஒன்றிணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, சரத் பவார் அறிவித்துள்ளதாக தெரிகிறது. அவர், கட்சியின் தலைமை பொறுப்பை கைப்பற்ற காய்களை நகர்த்துவார் எனவும் யூகிக்கப்படுகிறது.