இந்தியா

மகாராஷ்டிர வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ்

webteam

மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் சிக்கியுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. அங்கு பெய்து வரும் பலத்த மழையால் சாலைகள் மற்றும் பல குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் என்ற ரயில் மழை வெள்ளம் அதிகமாக சூழந்துள்ள பத்லாபூர், வங்கனி பகுதியில் சிக்கியுள்ளது. இந்த ரயிலில் 700க்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளனர். 

ஆகவே அவர்களை பத்திரமாக மீட்க ரயில்வே நிறுவனமும் மகாராஷ்டிர அரசும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பயணிகளை மீட்க மகாராஷ்டிர அரசு விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவற்றின் உதவியை நாடியுள்ளது. அத்துடன் தேவைப்பட்டால் அந்தப் பயணிகளை விமானம் மூலம் மீட்கவும் கோரிக்கை விடுத்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து ரயில் பயணிகளை மீட்க பேரிடர் மீட்புக் குழுவினர் 8 படகுகளுடன் ரயில் நின்று கொண்டிருக்கிற இடத்தை அடைந்துள்ளனர். இதற்கிடையே ரயிலில் இருக்கும் பயணிகள் யாரும் வெளியே இறங்க வேண்டாம் என்று ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் பயணிகளுக்கு தேவையான பிஸ்கேட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை அளிக்கவும் ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.