கஜேந்திர சிங்
கஜேந்திர சிங் twitter
இந்தியா

மத்தியப் பிரதேசம்: லஞ்சப் பணத்தை மென்று விழுங்கிய அரசு அதிகாரி! #ViralVideo

Prakash J

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் கட்னி நகரில் வருவாய் துறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் கஜேந்திர சிங். இவரை வேலை தொடர்பாக பர்கேடா கிராமவாசி ஒருவர் அணுகியுள்ளார். அவரிடம் கஜேந்திர சிங் ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டுள்ளார். இதுபற்றி லோக் ஆயுக்தா சிறப்பு போலீஸ் குழுவினரிடம் அந்த கிராமவாசி புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, அந்த அதிகாரியைக் கையும் களவுமாகப் பிடிக்க திட்டமிட்டனர் அதிகாரிகள்.

அதன்படி, கஜேந்திர சிங்கின் தனி அலுவலகத்திற்குச் சென்று அந்த நபர் ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாகக் கொடுத்திருக்கிறார். அதனைப் பெற்றுக் கொண்ட கஜேந்திர சிங்கை மறைந்திருந்த போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். போலீசாரைப் பார்த்ததும் உஷாரான கஜேந்திர சிங், லஞ்ச பணம் எல்லாவற்றையும் வாயில் போட்டு மென்று, விழுங்கினார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதுபற்றி வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து SPE காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் சாஹு, "பர்கேடா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், சிங் லஞ்சம் பெறுவதாகக் கூறி எங்களிடம் புகார் செய்தார். அவர் பணத்தைப் பெற்ற பிறகு, பட்வாரி SPE குழுவைப் பார்த்து பணத்தை விழுங்கினார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் நலமாக உள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.