இந்தியா

நாளை பெரும்பான்மையை நிரூபிக்க ம.பி., ஆளுநர் உத்தரவு.. நீடிக்குமா கமல்நாத் அரசு?

webteam

மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அம்மாநில காங்கிரஸ் அரசுக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார்.

காங்கிரஸ் இளம் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா கடந்த வாரம் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்திருந்த நிலையில் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் பதவியை ராஜினாமா செய்திருந்தனர்.

ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேரில் அமைச்சராக இருந்த 6 பேரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் பிரஜாபதி அறிவித்ததால் மத்திய பிரதேச சட்டப்பேரவையின் பலம் 222 ஆக குறைந்துள்ளது. எனவே பெரும்பான்மையை நிரூபிக்க 112 எம்எல்ஏக்களின் ஆதரவு காங்கிரசுக்கு தேவை என்ற நிலை உருவாகியுள்ளது.

ராஜினாமா கடிதம் அளித்த 16 எம்எல்ஏக்களின் ராஜினாமாவும் ஏற்கப்படும் பட்சத்தில் காங்கிரசின் ஆதரவு 92 ஆக குறையும். அதே நேரம் பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்கள் உள்ளது. இதனால் கமல்நாத் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அம்மாநில காங்கிரஸ் அரசுக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில் தங்கள் எம்எல்ஏக்கள் வலுக்கட்டாயமாக பெங்களூருவில் பிடித்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை விடுவித்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க உதவ வேணடும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் கடிதம் எழுதியுள்ளார்.