நாடு முழுவதும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 24 பேரின் ஆறு ஆண்டு பதவிக் காலம் 2026 ஜூன், ஜூலை மாதங்களில் முடிவடைகிறது. இதனால் அந்த இடங்களுக்கு ஜூன் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 3 இடங்கள் இடைத்தேர்தல் மூலமாகவும் நிரப்பப்பட உள்ளன. அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தில் 3 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் குதிரைப் பேரம் நடக்கக்கூடும் என்ற அச்சத்தால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
எம்எல்ஏக்கள் ஆதரவு அடிப்படையில் பாஜக 2 இடங்களிலும் காங்கிரஸ் ஓர் இடத்திலும் வெல்லும்நிலை உள்ளது. இந்நிலையில் பாஜக மூன்றாவதாக ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளதால் குதிரைப் பேரம் நடக்க வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கருதுகிறது. இதைத் தடுக்க காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள கர்நாடக மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதுவரை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூருவிலேயே இருப்பார்கள் எனத் தெரிகிறது.