இந்தியா

பாலியல் வழக்கு: மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ மகன் கைது

கலிலுல்லா

மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரின் மகன் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 6 மாதகாலமாக தலைமறைவாக இருந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்தியப் பிரதேசம், உஜ்ஜைன் மாவட்டத்தின் பட்நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் முரளி மோர்வால். இவரது மகன் கரண் மோர்வால். இவர் மீது பெண் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக  காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து கரண் மோர்வால் தலைமறைவானார். அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 25ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சஜாபூர் மாவட்டம் அருகே 30வயதான கரண் மோர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்பிரிவு தனிப்படையினர் அடங்கிய குழு, மோர்வால்  காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரைப் பிடித்ததாக தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட பின்னர், அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.