Modi mango
Modi mango File image
இந்தியா

சந்தைக்கு வர தயாராகும் ‘மோடி மாம்பழம்’ பற்றிய சுவாரஸ்ய விஷயங்கள்! விலை எவ்வளவு இருக்கும் தெரியுமா?

Kaleel Rahman, ஜெ.நிவேதா

உத்தரப்பிரதேச மாநிலம் மலிஹாபாத்தைச் சேர்ந்தவர் உபேந்திரா சிங். மாம்பழ ஆராய்ச்சியாளரான இவர், பலவிதமான ஊர்ப்புற மாம்பழங்களை ஆய்வு செய்துள்ளார். அப்போது அதிலொரு மாம்பழ வகை, பிரதமர் நரேந்திர மோடியின் 56 அங்குல மார்பு பகுதியை நினைவுபடுத்தி இருக்கிறது. உடனடியாக அந்த மாம்பழ வகைக்கு மோடியின் பெயரை வைக்கத் தூண்டப்பட்டிருக்கிறார் உபேந்திரா சிங்.

Modi mango

இதையடுத்து இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் மோடியின் பெயரில் இந்த ரகத்தை பதிவு செய்து ஒப்படைத்துள்ளார் அவர். இதைத் தொடர்ந்து அந்த மாம்பழத்தை ஆய்வகத்தில் இருந்தவர்களும் சுவைத்தபார்க்கவே, அதன் சுவை மிக வித்தியாசமாக இருந்ததாகவும், பின் அவர்கள் கூடி ஆலோசித்து இதற்கு மோடி என பெயரிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்ந்து மோடி மாம்பழம் என்ற பெயரில் அதை பதிவு செய்த சான்றிதழை வழங்கியுள்ளது வேளாண் ஆராய்ச்சி கவுன்சில். மோடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வகை மாம்பழத்தில் லக்னோவின் மாம்பழப் பகுதியான மலிஹாபாத்தில் கிடைக்கும் உலகப் புகழ் பெற்ற மாம்பழ வகையான தஸ்ஸேரியைப் போலவே, நார்ச்சத்தை விட அதிக கூழ் அதிகம் உள்ளதாக சொல்லப்படுகிறது. போலவே லேசான இனிப்புடனும் இது இருக்கிறதென சொல்லப்படுகிறது.

எப்படி உருவானது மோடி மாம்பழம்?

லக்னோவின் இரண்டு உள்ளூர் மாம்பழ வகைகளை இணைத்து இந்த ரக மாம்பழங்களை உருவாக்கியதாக சிங் கூறியுள்ளார். இந்த மாம்பழம் சராசரியாக 450 கிராம் எடை இருக்குமென சொல்லப்படுகிறது.

Modi mango registration

சந்தைக்கு வருகிறது மோடி மாம்பழம்!

2019-ல் லக்னோவில் நடந்த ‘பழங்களின் அரசன்’ என்ற கண்காட்சியில் இந்த மாம்பழம் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அது அப்போது சந்தை விற்பனைக்கு வரவில்லை. இந்நிலையில் இது அடுத்த வருடம் சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி சந்தைக்கு வரும்போது, சந்தையில் தற்போது உள்ள மாம்பழங்களை விட இது பன்மடங்கு அதிக விலை கொண்டிருக்கும் என உபேந்தரா சிங் தெரிவித்துள்ளார்.

இந்த மோடி மாம்பழங்களின் 1,000 மரக்கன்றுகள் தற்போது விற்பனைக்கு தயாராக இருப்பதாக உபேந்திரா சிங் தெரிவித்துள்ளார். அவை ஒவ்வொன்றின் விலையும் ரூ. 1,000-த்துக்கு மேல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘இந்த மா மரக்கன்றுகள் வருங்காலத்தில் இன்னும் அதிகம் விற்பனை செய்யப்படும். இந்தியாவின் மூலை முடுக்கிலும் அது விற்பனைக்கு செல்லும்’ என்றும் கூறியுள்ளார் அவர்.