இந்தியா

தமிழகத்தில் தேர்தல் பரப்புரை : சென்னை வந்தார் ராகுல் காந்தி

webteam

தமிழகத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை வந்தார்.

டெல்லியிலிருந்து விமானம் மூலம் ராகுல்காந்தி சென்னை வந்தார். அங்கிருந்து சென்னையில் ஒரு கல்லூரிக்கு சென்று மாணவிகளுடன் கலந்துரையாடலில் பங்கேற்கிறார். 

பின்னர் செய்தியாளர்களை சந்திக்கும் ராகுல்காந்தி பிற்பகலில் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் செல்லும் அவர், கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல் பரப்புரையை தொடங்க மேடை ஏறுகிறார். 

இந்த பொதுக்கூட்டம் நாகர்கோவில் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவர் காதர் முகைதீன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.