இந்தியா

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை

ச. முத்துகிருஷ்ணன்

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாத குழுக்களுக்கு நிதி உதவி செய்த குற்றச்சாட்டில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து  தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017-ல் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி செய்ததற்காகவும் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் 56 வயதான யாசின் மாலிக் மீது தேசிய புலனாய்வு முகமை (NIA) வழக்குப்பதிவு செய்தது.

அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) பிரிவு 18 (பயங்கரவாதச் செயலுக்கான சதி) மற்றும் 20 (பயங்கரவாத கும்பல் அல்லது அமைப்பின் உறுப்பினராக இருப்பது) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 120-B (குற்றச் சதி) மற்றும் 124-A (தேசத்துரோகம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்கில் அனைத்து குற்றச்சாட்டுகளையும் யாசின் மாலிக் ஒப்புக்கொண்டார். சிறப்பு நீதிபதி பிரவீன் சிங் மே 19 அன்று, யாசின் மாலிக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். இதையடுத்து இன்று தண்டனை விவரங்களை அறிவித்த நீதிபதி, யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.