இந்தியா

வணிக வளாகத்திற்குள் நுழைந்த சிறுத்தை : வைரல் வீடியோ

webteam

தானேவில் உள்ள மாலுக்குள் நுழைந்த சிறுத்தையை வனத்துறையினர் 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பிடித்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள பிரபல மால் ஒன்றில் இன்று அதிகாலை சிறுத்தை ஒன்று நுழைந்தது. காலை 5.30 மணியளவில் அந்தச் சிறுத்தையை மாலின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் கண்டுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், உடனே அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், சிறுத்தை சென்ற இடத்தை சிசிடிவி கேமராவில் பார்த்தனர். அப்போது மாலின் பின்புறம் இருக்கும் பார்க்கிங் கேட் வழியாக சிறுத்தை உள்ளே நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மீட்புக்குழுவினர், கால்நடை மருத்துவர் எனப் பலரும் அங்கு வந்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மதியம் 12 மணியளவில் சிறுத்தை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பிடிக்கப்பட்டது. தற்போது அதனை பாதுகாப்பாக சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவில் அடைத்துள்ளனர்.