இந்தியா

மத்திய பிரதேசம்: தந்தையின் கண்முன்னே சிறுமியை அடித்துக்கொன்ற சிறுத்தை

Veeramani

மத்தியப் பிரதேச மாநிலத்தின் சியோனி மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் தந்தையின் கண்முன்னே 16 வயது சிறுமியை சிறுத்தை அடித்துக் கொன்றது.

இது தொடர்பாக பேசிய வனக்காவலர் யோகேஷ் படேல், “இந்த சம்பவம் சனிக்கிழமை பிற்பகல் பாண்டிவாடா கிராமத்திற்கு அருகிலுள்ள கான்ஹிவாடா வனப்பகுதியில்ந்தது. 16 வயது சிறுமி ரவினா யாதவ் மற்றும் அவளுடைய தந்தை காட்டுக்குள்  கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்றபோது அந்த சிறுத்தை பின்னால் இருந்து தாக்கி அச்சிறுமியின் கழுத்தைப் பிடித்தது.

ரவீனாவின் தந்தை சிறுத்தையை குச்சியால் தாக்கி தனது மகளை காப்பாற்ற முயன்றார், ஆனால் சிறுத்தை அவரையும் தாக்கியது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அந்த இடத்தில் திரண்டதால், சிறுத்தை சிறுமியின் உடலை விட்டு காட்டுக்குள் தப்பிச் சென்றதுஎன தெரிவித்தார்.

இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு வனத்துறை உடனடியாக ரூ .10,000 நிதியுதவி அளித்துள்ளதாகவும், அவர்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும், சிறுமியை தாக்கிய சிறுத்தையை பிடிக்க அப்பகுதியில் கூண்டு அமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

இதேபோன்று செப்டம்பர் 15 ஆம் தேதி சியோனி மாவட்டத்தின் மோகான் கிராமத்திற்கு அருகே உள்ள காட்டில் 50 வயது பெண் ஒருவர் சிறுத்தையால் அடித்துக் கொல்லப்பட்டார்.