இந்தியா

கோவா முதல்வர் மறைவு: பல்வேறு தரப்பினர் இரங்கல்

webteam

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் (63) கடந்த அக்டோபர் மாதம் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பின்னர் அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை பெற்ற அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த அவர் அவ்வப்போது அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில், மனோகர் பாரிக்கரின் உடல்நிலை இன்று மோசமடைந்தது. இரவு 8 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் உயிரிழந்த தகவலைக் கேட்டு துயரமடைந்தேன். பொது வாழ்க்கையில் அர்பணிப்புடன் இருந்தவர். கோவா மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் அவர் ஆற்றிய சேவையை ஒருபோதும் மறக்க முடியாது என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்

மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ''கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் சேவையை வருங்கால சந்ததியினர் நினைவு கூறுவார்கள். மனோகர் பாரிக்கரின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது; அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார். 

தனது நோயை எதிர்த்து ஒரு ஆண்டுக்கும் மேலாக போராடிய கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.  கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது; திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கல் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 
தெரிவித்துள்ளார்.

உடல் நலிவுற்ற நிலையிலும் மெய்வருத்தம் பாராமல் பணியாற்றியவர் மனோகர் பாரிக்கர்; கோவாவில் பாஜக அரசை அமைத்து சிறப்பாக ஆட்சி நடத்தியவர் என்ற புகழ் என்றும் நிலைத்திருக்கும் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.  கட்சி கொள்கைகளை தாண்டி நல்ல மற்றும் பண்பான மனிதர் மனோகர் பாரிக்கர் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்