இந்தியா

சின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்த பெண் கைது

webteam

சின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்த பெண் பணம் பறித்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தா, அவரது சட்டக்கல்லூரியில் படித்த மாணவி அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின்பேரில், கடந்த 20 ஆம் தேதி கைது
செய்யப்பட்டு ஷாஜகான்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து, லக்னோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்த பெண் பணம் பறித்தல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே இந்தப் பெண் அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த அலாகாபாத் உயர்நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்தது. இதனைத் தொடர்ந்து இன்று அப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

சின்மயானந்தா தொடர்ந்த பணம் பறித்தல் வழக்கில் இந்தப் பெண்ணிற்கு தொடர்பு உள்ளது என்று கடந்த வாரம் சிறப்பு விசாரணை குழு கண்டுபிடித்தது. இந்த வழக்கில் அப்பெண்ணும் அவரது மூன்று நண்பர்களும் பாலியல் வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிப்பதற்காக சின்மயானந்தாவிடம்  பணம் கேட்டு மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பெண்ணுடைய நண்பர்கள் சின்மயானந்தா 5 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.