இந்தியா

லாலு பிரசாத் யாதவின் சிறுநீரகம் 20% திறனில் மட்டுமே செயல்படுகிறது: ரிம்ஸ் மருத்துவமனை

Veeramani

ராஷ்ட்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை கவலைக்கிடமானதாகவும், ஆனால் சீராக இருப்பதாகவும் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகம்(RIMS) தெரிவித்துள்ளது.

லாலு பிரசாத்துக்கு சிகிச்சை அளிக்க RIMS ஆல் அமைக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட மருத்துவக் குழுவின் தலைவர் வித்யாபதி பேசுகையில் "லாலு பிரசாத் யாதவின் இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் ஏற்ற இறக்கமாக உள்ளது. சர்க்கரை அளவு காலையில் 70 mg/dl ஆக இருந்தது, ஆனால் மதியம் 240 mg/dl ஆக இருந்தது. அவரது சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் 130 முதல் 160 வரை ஏற்ற இறக்கமாக உள்ளது. லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறார். அவர் சிறுநீரக நோயின் நான்காம் நிலை நோயாளி ஆவார், தற்போது அவரது சிறுநீரகம் 20 சதவீத திறனில் மட்டுமே செயல்படுகிறது. அவரது உடல்நிலை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

5-வது கால்நடைத் தீவன ஊழல் தொடர்பாக 73 வயதான பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு, சிறப்பு சிபிஐ நீதிமன்றம் நேற்று 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்தது.

கால்நடை தீவன வழக்குகளில் தண்டனை பெற்ற லாலு பிரசாத் 2017 டிசம்பரில் இருந்து சிறையில் இருக்கிறார். அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் தற்போது ரிம்ஸ்-ல் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக லாலு பிரசாத் யாதவ் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.