இந்தியா

கேரளாவில் 21 பேர் உயிரிழக்க விமானியின் பிழையே காரணம் என அறிவிப்பு

கலிலுல்லா

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிகழ்ந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்துக்கு விமானியின் பிழையே காரணம் என்று விமான விபத்து விசாரணை பணியகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியன்று துபாயிலிருந்து கோழிக்கோட்டிற்கு வந்த அந்த விமானத்தில் 184 பயணிகளும், 6 பணியாளர்களும் இருந்தனர். விமானம் தரையிறங்கும்போது இரண்டாகப் பிளந்து விபத்துக்குள்ளானதில், விமானி, துணை விமானி, பயணிகள் 19 பேர் என மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் மிகப்பெரிய அளவிலான விபத்தும், உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டதாக அப்போது தகவல்கள் வெளியாகின.

இதுபோன்ற சூழலில், விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய விமான விபத்து விசாரணை பணியகத்தின் 257 பக்க அறிக்கை ஓராண்டுக்குப் பின்னர் நேற்று வெளியிடப்பட்டது. அதில் விமானத்தை தரையிறக்குவதற்கான STANDARD OPERATING PROCEDURES எனப்படும் நிலையான இயக்க நடைமுறைகளை விமானி கடைப்பிடிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவே விபத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.