arunima The federal
இந்தியா

தாலிபான்களால் தடுத்து நிறுத்தப்பட்ட கேரளப் பெண்.. நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ஆப்கானிஸ்தானில் தனியாகப் பயணித்த கேரள யூடியூபருக்கு தாலிபான் அதிகாரிகள் தடையிட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

PT WEB

கேரளாவைச் சேர்ந்த பயண விலாக்கர் அருணிமா, தனியாக ஆப்கானிஸ்தானின் பாமியான் பகுதியில் சுற்றுலா சென்றபோது தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூர் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். ஆண் துணை இல்லாமல் பயணம் செய்தது விதிமீறல் என கூறி அவரது பாஸ்போர்ட், விசா சோதனை செய்யப்பட்டதால், கைது அச்சத்தில் சமூக வலைதளத்தில் இந்திய தூதரக உதவி கோரினார். பின்னர் பேச்சுவார்த்தையால் விடுவிக்கப்பட்டார்.

செய்தியாளர்- M. மீரா

கேரளாவின் பாலக்காடு மாவட்டம் ஒட்டப்பாலத்தைச் சேர்ந்த அருணிமா ஐ.பி., ‘Backpacker Arunima’ என்ற பெயரில் பயண வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தனியாக ஆப்கானிஸ்தானுக்கு சென்ற அவர், பாமியான் பகுதியில் எதிர்பாராத சிக்கலை எதிர்கொண்டார்.

அங்கு உள்ளூர் அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட் மற்றும் விசாவை சோதனை செய்ததுடன், ஆண் துணை அல்லது வழிகாட்டி இல்லாமல் தனியாகப் பயணம் செய்தது விதிமீறல் எனக் கூறியதாக அருணிமா தெரிவித்துள்ளார். முன்னதாக ஜலாலாபாத்திலும் தனியாகப் பயணம் செய்த காரணத்தால் அவருக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

Arunima

இந்தச் சூழலில் கைது செய்யப்படலாம் என அச்சமடைந்த அருணிமா, சமூக வலைதளத்தில் அவசர உதவி கோரி, இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள உதவுமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் உள்ளூர் தொடர்புகள் மூலம் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அவர் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் தான் பாதுகாப்பாக இருப்பதாக அருணிமா தெரிவித்தார். மேலும், “நான் ஒரு பெண் என்பதற்காகவே இத்தனை சிக்கல்களை சந்திக்க வேண்டியிருந்தது” என்று அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்