இந்தியா

சபரிமலை செல்ல 41 நாள் விரதம் தொடங்கிய டீச்சருக்கு கொலை மிரட்டல்!

சபரிமலை செல்ல 41 நாள் விரதம் தொடங்கிய டீச்சருக்கு கொலை மிரட்டல்!

webteam

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்காக விரதம் தொடங்கிய ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு கூறியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், நவம்பர் 17 ஆம் தேதி சபரிமலையில் மண்டலை பூஜை தொடங்குகிறது. இதற்காக பக்தர்கள் விரதம் இருக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து சில பெண்களும் சபரிமலை கோவிலுக்கு செல்வதற்காக விரதம் இருந்து வருகின்றனர். இதில் ஒருவர், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரேஷ்மா (32). ஆசிரியையான இவர் மாலை அணிந்து 41 நாள் விரதத்தை தொடங்கி உள்ளார்.

இந்த தகவலை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரேஷ்மா, ’நான் ஐயப்ப பக்தை. அதனால் விரதம் இருந்து மலைக்கு செல்கிறேன். என்னுடன் மேலும் சில இளம்பெண்கள் சபரிமலைக்கு வர இருக்கிறார்கள்’ என்று தெரிவித்திருந்தார். 


இதையடுத்து வங்கி ஒன்றில் பணிபுரிந்து வரும் ரேஷ்மாவின் கணவர் நிஷாந்துக்கு மிரட்டல் வந்தன. மனைவியை கோயிலு க்குச் செல்லவிடாமல் தடுக்க வேண்டும் என்று அவரிடம் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் வீட்டு முன் கூடி நேரடியாக மிரட்டி விட்டு சென்றுள்ளனர். இதைத் தொடர் ந்து, சமூக ஊடகங்கள் மூலமும் மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும், அரசு தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.