கேரள பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் ஒருவரை கத்தியால் குத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க அவர்கள் மீது காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் பயிலும் பி.ஏ. அரசியல் அறிவியல் மூன்றாம் ஆண்டு மாணவர் அகில். இவர், பல்கலைக் கழக வளாகத்தில் வைத்து நேற்று தாக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் அகிலை தாக்கியுள்ளதாக பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
பல்கலைக் கழக வளாகத்தில் சத்தமாக பாடியதற்காக அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உடனடியாக அகில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவரும் எஸ்.எஃப்.ஐ உறுப்பினர் ஆவார்.
அகில் கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்து நேற்றே பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தாக்குதலில் ஈடுபட்ட எஸ்.எஃப்.ஐ மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அதனால், பல்கலைக் கழக வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர் கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்தும், தாக்கிய மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அகில இந்திய மாணவர் சங்கத்தினர் கேரள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தை நடத்தினர். தடுப்புகளை அகற்ற முயன்ற போராட்டக்காரர்களை கலைக்க அவர்கள் மீது தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டது.