மாதிரிபடம் கோப்பு படம்
இந்தியா

கேரளா: இறந்த தாயின் உடலை, குடிபோதையில் வீட்டில் புதைக்க முயன்ற மகன் கைது!

கேரளா :கொச்சியில் இறந்த தன் தாயின் உடலை வீட்டின் உள்ளே புதைக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

Jayashree A

கேரளா :கொச்சியில் இறந்த தன் தாயின் உடலை வீட்டின் உள்ளே புதைக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர். என்ன நடந்தது? பார்க்கலாம்...

கொச்சியை அடுத்த வெண்ணலையைச் சேர்ந்தவர் அல்லி. 72 வயதான இவருக்கு பிரதீப் என்ற மகனும் ஒரு மகளும் இருந்துள்ளனர். இதில் மகள் அவரது குடும்பத்துடன் காக்காநாட்டில் வசித்து வருகின்றார். பிரதீப்பிற்கு குடிப்பழக்கம் இருந்ததால், பிரதீப்பின் மனைவி தனது மகனுடன் வேறொரு வீட்டில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அல்லி தனது மகன் பிரதிப்புடன் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. பிரதீப் அப்பகுதியில் டயர்கடை நடத்தி வந்துள்ளார். பிரதீப் குடிபோதையில் அக்கம்பக்கத்தினருடன் அடிக்கடி தகறாரில் ஈடுபட்டு வந்ததால், அவர்கள் யாரும் பிரதீப் குடும்பத்தினருடன் பேசுவதில்லை என்றுக்கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அல்லியின் உடல்நிலை மோசமாகி வந்துள்ளது. ஆகையால் தனது தாயாரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றுள்ளார் பிரதீப். இருப்பினும் கடந்த இரு நாட்களுக்கு முன் அல்லி மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது.

மரணமடைந்த தனது தாயை அடக்கம் செய்ய இரு நாட்களுக்கு முன்பு பிரதீப் குடிபோதையில் தனது வீட்டின் முற்றத்தில் குழித் தோண்டியுள்ளார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அல்லியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, பிரதீப்பிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் நடத்திய விசாரணையில், “எனது தாயாரின் ஈமக்காரியத்திற்கு கூட அக்கம்பக்கத்தினர் உதவவில்லை. மேலும் உடலை அடக்கம் செய்யக்கூட என்னிடம் பணமில்லை. ஆகவேதான் அம்மாவின் உடலை வீட்டிற்குள் புதைப்பதற்காக குழி தோண்டினேன்” என பிரதீப் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.