இந்தியா

எங்கெங்கு காணினும் ஐயப்ப சரணம்... சபரிமலையில் பக்தர்களை மகிழ்விக்க நடனம் ஆடிய நடிகர்!

webteam

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்கான பக்தர்களின் தரிசனத்திற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே மீதம் உள்ளது என்பதால், அங்கு கூட்டம் அலைமோதி வருகிறது.

சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் தரிசனம் முடிந்த டிசம்பர் 27ஆம் தேதி வரை 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் முடித்துள்ளனர். தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜனவரி 14 ஆம் தேதி, மகர விளக்கு பூஜையும் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடந்தது.

இதன் முடிவில் மண்டல மற்றும் மகா விளக்கு பூஜைக் காலத்தில் தற்போது வரை 44 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து முடித்துள்ளதாத கணக்கிடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ஜனவரி 20ஆம் தேதி பந்தள மகாராஜா குடும்பத்தினர் தரிசனத்துடன் நடை அடைக்கப்படுகிறது. அன்றையதினம், பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை.

அந்த வகையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்கான பக்தர்களின் தரிசனத்திற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே மீதம் உள்ளது.
அதோடு அரச கோலத்தில் ஐயப்பனைக் காணும் ஆவலோடு சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் மொய்த்து வருகிறது. கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சபரிமலையில் தினசரி முன்பதிவு செய்த 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே சபரிமலையில் தரிசனத்திற்காக காத்திருக்கும் ஐயப்ப பக்தர்களை மகிழ்விக்கவும், களைப்பை போக்கி அவர்களை உற்சாகப்படுத்தவும் தினம்தோறும் பத்தி இன்னிசை, பாரம்பரியமிக்க நாட்டியங்கள் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன. அந்தவகையில் இன்றையதினம் சபரிமலை சன்னிதானத்தில் கேரள சின்னத்திரை நடிகர் அஷ்பின் அனில் நிகழ்த்திய பாரம்பரிய குச்சிப்புடி நடனம் ஐயப்ப பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. 

முறைப்படி குச்சிப்பிடி நடனம் கற்ற அஷ்பின் அனிலின் நடன அரங்கேற்றத்தைப் பார்த்து ராகம், தாளத்திற்கு ஏற்ப அபிநயங்களையும் பெரிய நடைப் பந்தலில் காத்திருந்த ஐயப்ப பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.