இந்தியா

'எல்லாம் முழு சம்மதத்துடன்தான் நடந்தது' கேரள பாதிரியார் வாக்குமூலம்

'எல்லாம் முழு சம்மதத்துடன்தான் நடந்தது' கேரள பாதிரியார் வாக்குமூலம்

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள சர்ச்சில் அம்மாநிலத்தை சேர்ந்த நால்வரும் டெல்லியை சேர்ந்த ஒருவரும் பாதிரியாராக உள்ளனர். இந்நிலையில் சர்ச் நிர்வாகத்திற்கு திருவலாவைச் சேர்ந்த ஒருவர் எழுதிய கடிதம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. அதில் பாவமன்னிப்பு கேட்க வந்த தனது மனைவியை 5 பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இந்த விவகாரம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இது குறித்த ஆடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில் அதை அடிப்படையாக கொண்டு தாமாக முன்வந்து இவ்விவகாரத்தில் தீர்வு காண உட்படுத்த தேசிய மகளிர் ஆணையம் முடிவு செய்தது. இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அம்மாநில காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹரா உத்தரவிட்டார். 

இந்த நிலையில் போலீசார் தங்களை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்கக் கோரி கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்கள் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதில் அரசியல் நெருக்கடி காரணமாக தங்கள் மீது இந்த பாலியல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்று அவர்கள் கூறி இருந்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி ராஜா விஜயராகவன் உத்தரவிட்டார். இதனையடுத்து இவ்விவகாரத்தில் கடந்த வாரம் பாதிரியார் ஜோப் பி மாத்யூ மற்றும் ஜான்சன் பி மாத்யூவை போலீஸார் கைது செய்தனர்.

இதில் குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார்கள் ஆபிரகாம் வர்க்கீஸ் மற்றும் ஜேம்ஸ் கே.ஜார்ஜ் ஆகியோர் முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை தொடங்கிய உச்ச நீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை பாதிரியார்களை கைது செய்யக் கூடாது என்று கேரளா போலீஸாருக்கு நேற்று உத்தரவிட்டது.

இதில் பாதிரியார் ஜேம்ஸ் தாக்கல் செய்திருந்த மனுவில் " அந்தப் பெண்ணின் குடும்பத்தை எனக்க பல ஆண்டுகளாய் தெரியும். அந்தப் பெண்ணுடன் பல முறை உறவில் ஈடுபட்டுள்ளேன். இவை எல்லாமே அந்தப் பெண்ணின் முழு சம்மதத்துடன்தான் நடைபெற்றது. இப்போது யாரோ மிரட்டியுள்ளதால் என் மீது அபாண்டமான புகாரை கூறியுள்ளார். பாவ மன்னிப்பு குறித்து அந்தப் பெண் ஏதும் தெரிவிக்கவில்லை எனவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்" என பாதிரியார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.