இந்தியா

பாதிரியார்களின் பாலியல் விவகாரம்: காவல்துறை விசாரணைக்கு உத்தரவு !

webteam

கேரளாவில் ஒரு பெண்ணை ஐந்து பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டு குறித்து அம்மாநில காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹரா விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள சர்ச்சில் அம்மாநிலத்தை சேர்ந்த நால்வரும் டெல்லியை சேர்ந்த ஒருவரும் பாதிரியாராக உள்ளனர். இந்நிலையில் சர்ச் நிர்வாகத்திற்கு திருவலாவைச் சேர்ந்த ஒருவர் எழுதிய கடிதம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. அதில் பாவமன்னிப்பு கேட்க வந்த எனது மனைவியை 5 பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும் சர்ச் நிர்வாகி ஒருவரும் பேசிய ஆடியோ பதிவுகள் வெளியாகியது. அதில், திருமணத்திற்கு முன்பு தனது மனைவி பாதிரியார் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மகளின் ஞானஸ்தானத்தின் போது, இதுகுறித்து மற்றொரு பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்டுள்ளார். பாவமன்னிப்புகளை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டிய பாதிரியாரோ எனது மனைவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதனை மற்ற மூன்று பாதிரியாரிடமும் தெரிவித்துள்ளார். அவர்களும் பாலியல் வன்கொடுமை செய்ததாக பேசியுள்ளார்.  இவ்விவகாரம் குறித்து இதுவரை காவல்நிலையத்தில் எந்தப்புகாரும் தெரிவிக்கப்படவில்லை. சமூகவலைதளத்தில் ஆடியோ பேச்சு பரவியதையடுத்து இந்தவிவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இவ்விவகாரத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  இது குறித்த ஆடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில் அதை அடிப்படையாக கொண்டு தாமாக முன்வந்து இவ்விவகாரத்தில் தீர்வு காண உட்படுத்த தேசிய மகளிர் ஆணையம் முடிவு செய்தது. இதற்கிடையில் சர்ச்சையில் சிக்கிய 5 பாதிரியார்களும் இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.