இந்தியா

தங்கக் கடத்தல் வழக்கு: அமலாக்கத்துறை மீது கேரள போலீஸ் வழக்கு!

jagadeesh

தங்கக் கடத்தல் வழக்கு விவகாரத்தில் அமலாக்கத் துறை மீது கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷை முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக பொய்யான வாக்குமூலம் தர வற்புறுத்தியதாக அவ்வழக்கில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷை கடந்த ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் விசாரித்தனர்.

அப்போது முதலமைச்சருக்கு எதிராக வாக்குமூலம் தரக்கோரி தன்னை அமலாக்கத்துறையினர் வற்புறுத்தினர் என ஸ்வப்னா சுரேஷ் கூறுவது போன்ற குரல் பதிவு ஒன்று வெளியாகியிருந்தது. அந்த பதிவில் இருந்தது தன் குரல்தான் என ஸ்வப்னா சுரேஷ் ஒப்புக்கொண்டிருந்தார். இந்நிலையில் அமலாக்கத்துறை மீது காவல்துறை வழக்குப்பதிந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் பினராயி விஜயன், சட்டவிரோதமாக ஒரு செயலை செய்யும்போது தங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை பாயும் என்பதை அதிகாரிகள் உணர்ந்திருக்க வேண்டும் என்றார்.

மத்திய அரசு அமைப்பிற்கு எதிராக மாநில காவல்துறை வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூதரகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளை பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரப்பட்ட புகாரில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, சுங்கத் துறை ஆகிய அரசு அமைப்புகள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றன