Kerala High Court  web
இந்தியா

”பாஜக கவுன்சிலர்களின் சத்தியம் செல்லாது” - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தெய்வம், பாரத மாதா பெயரில் பதவி ஏற்ற 20 பாஜக கவுன்சிலர்களின் சத்தியம் செல்லாது என கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

PT WEB

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த ஜனவரி மாதம் கவுன்சிலர்களின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. கவுன்சிலர்கள் பதவி ஏற்கும்போது தெய்வங்கள், பாரத மாதா மற்றும் அரசியல் இயக்க தியாகிகளின் பெயரை கூறி பதவி ஏற்றுகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த கவுன்சிலர்களின் பதவி பிரமாணத்தை எதிர்த்தும் அவர்களை தகுதி நீக்கம் செய்ய கோரியும், சிபிஎம் கவுன்சிலர் தீபக் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து இன்று நீதிமன்றத்திற்கு வந்த இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் 1994ல் கொண்டுவரப்பட்ட கேரள நகராட்சி சட்டத்தின் படி, பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பதவியேற்றுக்கொண்ட 20 பாஜக கவுன்சிலர்களின் பதவி பிரமாணத்தை செல்லாது என அறிவித்து உத்தரவிட்டது. மேலும் அதனுடன் 4 வாரத்திற்கும் புதிய பதவி ஏற்பு விழாவை நடத்த வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளது.

ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் விசுவாசமாக இப்பேன் என்றும் மக்களுக்குஉண்மையாக சேவை செய்வேன் எனவும் உறுதி ஏற்பதே பதவி பிரமாணத்தின் முக்கிய நோக்கமாகும். அரசியல் கட்சிகள் அல்லது தெய்வங்களின் பெயர்களில் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்வது சட்டத்திற்கு எதிரானது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பதவி பிரமாணத்தில் ஏற்பட்ட தவறுக்காக அவர்களின் தேர்தல் வெற்றிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.