இந்தியா

உலகின் டாப் 50 சிந்தனையாளர்கள் பட்டியல் - முதலிடத்தில் கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜா

webteam

கேரள மாநிலத்தில் கொரோனா தடுப்புப் பணிகளில் முன்மாதிரியாகச் செயல்பட்டு, தொற்றைக் கட்டுக்குள் வைத்த மாநில சுகாதார அமைச்சர் கேகே. சைலஜா, உலகின் 50 சிந்தனையாளர்களில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிராஸ்பெக்ட் என்ற பத்திரிகை வெளியிட்ட இந்த சாதனையாளர்கள் பட்டியலில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனை பின்னுக்குத் தள்ளியுள்ளார் ஷைலஜா.

உலகின் சிறந்த 50 சிந்தனையாளர்கள் பட்டியல் மக்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகளை முன்னரே உணர்ந்து, அதன் தாக்கங்களை முழுமையாகப் புரிந்துகொண்டார் என்று பிராஸ்பெக்ட் பத்திரிகை ஷைலஜாவைப் பாராட்டியுள்ளது.

கொரோனா தொற்று கண்டவர்களை தனிமைப்படுத்தல், கண்காணித்தல், சிகிச்சை அளித்தல் மூலம் அவசரகால நடவடிக்கைகளை எடுத்தவர் என்றும், அரசு அலுவல் சார்ந்த கூட்டங்களைக்கூட சமூக இடைவெளியுடன் கடைப்பிடித்தவர் என்றும் அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பற்றிக் குறிப்பிட்டுள்ள பிராஸ்பெக்ட் பத்திரிகை, அவரது அரசாளும் முறையைப் பாராட்டியுள்ளது.