இந்தியா

பம்பைக்கு இலகு ரக வாகனங்கள் மூலம் பக்தர்கள் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி

webteam

சபரிமலை பக்தர்கள் பம்பை வரை இலகு ரக வாகனங்களில் பயணிக்க கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் நிலக்கல் வரை வாகனங்களில் சென்றுவிட்டு பின்னர் கேரள அரசு பேருந்தான கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தில் பம்பை வரை பயணம் செய்யவேண்டும் என்ற கட்டுப்பாட்டை கடந்த ஆண்டு கேரள அரசு விதித்தது. ஏனென்றால் அங்கு கடந்த ஆண்டு பெய்த மழையால் பம்பை மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் கேரளா அரசு அங்கு வாகனங்களை அனுமதிக்க வேண்டாம் என்ற முடிவை எடுத்தது. 

இந்த விவகாரம் தொடர்பாக ஆலப்புழாவை சேர்ந்த பிரசன்னகுமார் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் நிலக்கல்லில் இருந்து பம்பை வரை இலகு ரக வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.ரவிக்குமார் மற்றும் என்.நாகரேஷ் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இலகு ரக வாகனங்களை பம்பைக்கு அனுமதிக்க உத்தரவிட்டனர். 

மேலும் இந்த வாகனங்கள் அனைத்தும் பக்தர்களை பம்பையில் இறக்கி விட்டு பின்னர் மீண்டும் நிலக்கல்லில் வந்து நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். பம்பையிலுள்ள சாலைகளில் இந்த வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல இந்த உத்தரவு இருசக்கர வாகனங்களுக்கு செல்லாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.