கேரளாவில் நோய் பாதித்த மற்றும் தொற்று நோய்களை பரப்பக்கூடிய தெருநாய்களை கருணைக் கொலை செய்ய மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கேரளாவில் தெருநாய்கள் தொல்லை மிகவும் அதிகமாகி உள்ளது. தெருநாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும், நாய்க்கடியால் தினமும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன் மலப்புரத்தில் 6 வயது சிறுமியை தெருநாய் கடித்துக் குதறியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தடுப்பூசி போடப்பட்டது. எனினும் சில நாட்களுக்கு பின் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், நோய் பாதித்த மற்றும் தொற்று நோய்களை பரப்பக்கூடிய தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது. தெருநாய்க்கடி சம்பவங்களால் ரேபிஸ் தொற்று அதிகரித்து வருவதால், கால்நடை மருத்துவரிடம் சான்று பெற்று கருணைக் கொலை செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.