இந்தியா

பட்டியலினத்தைச் சேர்ந்தவருக்கு முடிவெட்ட மறுத்த சலூன் – புதிய சலூனை திறந்த அரசு..!

webteam

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வட்டவடா பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு முடிவெட்ட சலூன் கடைகள் மறுப்பதாக புகார்கள் எழுந்தன. இது கேரள அரசு வரை சென்றது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும், வட்டவடா பஞ்சாயத்து தலைவருமான ராமராஜ் விசாரணை மேற்கொண்டார். பின்னர், சலூன் கடைக்காரர்களுக்கு பஞ்சாயத்து சார்பில் வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டதுடன், கடைகளை அடைக்கவும் அவர் உத்தரவிட்டார்.

 இதனையடுத்து, பஞ்சாயத்து சார்பில் கோவிலூர் பகுதியில் புதிய சலூன் கடை திறக்கப்பட்டுள்ளது. புதிய சலூன் கடையை, தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் அண்மையில் திறந்து வைத்தார்.

கடை திறக்கப்பட்ட போது அங்கு 13 பேர் வாடிக்கையாளர்களாக இருந்தனர். அதில் 8 பேர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், 5 பேர் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

இங்கு எந்தவித பேதமில்லாமல் அனைவருக்கும் முடி வெட்டப்படும் என்றும், மற்ற சலூனில் வசூலிக்கப்படும் கட்டணமே வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இடுக்கி மாவட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.