சபரிமலை கோயிலை நிர்வகிக்க தனிச்சட்டம் கொண்டு வர ஆலோசித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் தரிசனம் செய்ய தடை இருந்தது. இதனையடுத்து, சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. ஆனால், தரிசனம் செய்ய கோயிலுக்கு சென்ற பெண்கள் பலரும், அங்கிருந்த பக்தர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால், கடந்த டிசம்பர் - ஜனவரி மாதத்தில் சபரிமலை பகுதியில் பெண்கள் தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், சபரிமலை கோயிலை நிர்வகிக்க தனிச்சட்டம் கொண்டு வர ஆலோசித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது. தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயிலின் நிர்வாகத்தில் மாற்றம் கொண்டுவர உள்ளதாகவும் கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் இதுதொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.