இந்தியா

கேரள மழை வெள்ள உயிரிழப்பு 104 ஆக உயர்வு

webteam

கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது.

பெரும் நிலச்சரிவு ஏற்பட்ட மலப்புரம் மாவட்டத்தில், மண்ணில் புதைந்திருக்கும் 32 பேரின் உடல்களை தேடும் பணி நடை பெற்று வருகிறது. ஏற்கனவே மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 104 ஐ எட்டியிருக்கும் நிலையில், கோழிக் கோடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு "ஆரஞ்ச் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது.

மழை குறைய வாய்ப்பிருப்பதாகவும் திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‌மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 24ஆயிரத்து 506 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

வெள்ளத்தால் 1 லட்சத்து 30‌ ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வீடுகளை இழந்தவர்களுக்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடும், வீடு மற்றும் நிலம் இழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் வழங்கப்பட உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.