Tiger
Tiger pt desk
இந்தியா

கேரளா: ஒரே பகுதியில் சுற்றிவரும் ஆண் புலி... மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தீவிர முயற்சி!

webteam

செய்தியாளர் மகேஷ்வரன்

----

வயநாடு மாவட்டத்தில் உள்ள வாகேரி பகுதியில் இளைஞரொருவரை கொன்ற புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான பணிகள் 6 வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. அப்போது இளைஞர் கொல்லப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி கேமராவில் பதிவாகி இருந்த புலியின் புகைப்படத்தை வைத்து அதன் அடையாளத்தை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

புலி

ஏற்கனவே வனத்துறையிடம் இருந்த புலிகளின் தரவுகள் அடிப்படையில் அது WWL45 எண் கொண்ட புலி என உறுதியாகியிருக்கிறது. அது 13 வயதுடைய ஆண் புலி என்பதை கேரள வனத்துறை உறுதி செய்திருக்கிறது.

குறிப்பிட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் காணப்பட்ட கால் தடங்களை வைத்து ஒரே புலி அப்பகுதியில் சுற்றி வருவதையும் வனத்துறை உறுதி செய்து இருக்கிறது. இளைஞரை கொன்ற புலியின் அடையாளம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான பணிகளை வனத்துறை தீவிரப்படுத்திருக்கிறது.

புலியின் கால் தடங்களை வைத்து அதன் இருப்பிடத்தை கண்டறிந்துள்ள வனத்துறையினர், அதனை மயக்க ஊசி செலுத்திப்பிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.  அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள வனத்துறை அதற்கு மயக்க ஊசி செலுத்தியை பிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

புலியை பிடிக்கும் பணிக்காக முத்தங்கா யானைகள் காப்பகத்தில் இருந்து விக்ரம், பரத் ஆகிய கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. கும்கி யானைகள் மீது அமர்ந்து புலிக்கு மயக்க ஊசி செலுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. புலியை சுட்டுக் கொல்வதற்கு ஏற்கனவே உத்தரவு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனை உயிருடன் பிடிப்பதற்கான முயற்சியை வனத்துறை கையில் எடுத்திருக்கிறது.

இந்த நிலையில் புலியை விரைந்து பிடிக்க கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே சசிந்திரன் உத்தரவிட்டு இருக்கிறார். புலியை பிடிப்பதற்காக 25 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன, மூன்று கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மயக்க மருந்து செலுத்தும் மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். புலி சிக்கினால்தான் எங்கள் கிலி போகும் என்கிறார்கள் வயநாடு மக்கள்.