இந்தியா

ரிமோட் பேட்டரியை விழுங்கிய 2 வயது சிறுவன் - 20 நிமிடங்களில் காப்பாற்றிய மருத்துவர் குழு

Sinekadhara

டிவி ரிமோட் பேட்டரியை விழுங்கிய 2 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர் கேரள மருத்துவர்கள்.

விளையாட்டுக் குழந்தைகள் தவறுதாக கையில் இருக்கும், பாசிமணிகள், நாணயங்கள் போன்றவற்றை விழுங்கி விடுவதுண்டு. சரியான நேரத்தில் பெற்றோர் அதனை கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடுவதுண்டு. அதுபோன்றதொரு சம்பவம் தற்போது கேரளாவில் நடந்துள்ளது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 2 வயது சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தபோது தவறுதலாக டிவி ரிமோட் பேட்டரியை விழுங்கிவிட்டான். இதனையறிந்த பெற்றோர் உடனடியாக சிறுவனை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அவர்கள் சிறுவனை NIMS மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுமாறு அறிவுறுத்தியதன்பேரில், உடனடியாக அங்கு கொண்டுசென்றுள்ளனர். சிறுவனின் நிலைமையை புரிந்துகொண்ட மருத்துவர்கள் குழு 20 நிமிடங்களில் அறுவைசிகிச்சை மேற்கொண்டு பேட்டரியை அகற்றி குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

இதுகுறித்து குழந்தைக்கு சிகிச்சையளித்த இரைப்பை குடல் நிபுணர் ஜெயகுமார் கூறுகையில், “குழந்தை ரிஷிகேஷ், பேட்டரியை விழுங்கியது தெரியவந்தவுடன், பெற்றோர் அவனை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். இதுகுறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தவுடன், நாங்கள் உடனடியாக ஆபரேஷன் தியேட்டரை தயார் செய்து, குழந்தைக்கு மயக்கமருந்து செலுத்தி, 20 நிமிடங்களில் எண்டோஸ்கோபி சிகிச்சைமூலம் வயிற்றிலிருந்த பேட்டரியை அகற்றிவிட்டோம். வயிற்றை தவிர வேறு இடத்தில் பேட்டரி சிக்கியிருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். தற்போது குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

குழந்தையின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட அந்த பேட்டரியின் அளவு, 5 செ.மீ நீளம் மற்றும் 1.5 செ.மீ அகலம் எனக்கூறப்பட்டுள்ளது.