கேரளாவில் மோடி Pt web
இந்தியா

"வடக்கில் சரிசெய்துவிட்டு தெற்கே வரட்டும்”.. பிரதமர் மோடி கேரள வருகை.. காங்கிரஸ் விமர்சனம்!

வடமாநிலங்களில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்துவிட்டு, பிரதமர் மோடி தென்மாநிலங்களில் பாஜக ஆட்சியை அமைக்கட்டும் என கேரளா காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

PT WEB

தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட 5 மாநிலத் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த நிலையில், நேற்று மதியம் தமிழகம் வந்த பிரதமர் மோடி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர்.

அம்ரித் பாரத் ரயில் சேவை

தமிழகம் வருவதற்கு முன்னதாக நேற்று, கேரள சென்றிருந்த அவர், அங்கு அம்ரித் பாரத் ரயில் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், அம்ரித் பாரத் ரயில்கள் மூலம் கேரளாவில் ரயில் போக்குவரத்து இணைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், ”குஜராத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு 1 இடத்தை மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. ஆனால், தற்போது அங்கு பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது. அதுபோலவே, திருவனந்தபுரம் மாநகராட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. விரைவில், கேரளாவில் பாஜக ஆட்சி அமைக்கும்” என்றார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, கேரளாவில் பாஜக ஒருபோதும் ஆட்சியை அமைக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். வடமாநிலங்களில் குடிநீர் பிரச்சினை, காற்றுமாசு என பல பிரச்சினைகள் இருப்பதாக கூறிய ஷாமா முகமது, முதலில் அதனை சரிசெய்துவிட்டு பின் தெற்கில் ஆட்சி அமைக்கட்டும் என தெரிவித்துள்ளார்.