வி.டி.சதீசன், ரமேஷ் சென்னிதலா, கே.சி.வேணுகோபால்  புதிய தலைமுறை
இந்தியா

கேரளா | முதல்வர் ரேஸில் 3 பேர்.. முடிவு ராகுல் கையில்!

முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் பந்து காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடமே இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், அடுத்த 24 மணி நேரத்தில் முடிவு அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Prakash J

கேரளாவில் முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது.

கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. குறிப்பாக, காங்கிரஸ் 63 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 22 தொகுதிகளிலும், கேரள காங்கிரஸ் 7 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன்மூலம், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி பத்தாண்டுக்கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. இந்த நிலையில், கேரளத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைய உள்ள நிலையில், முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பது காங்கிரஸ் கட்சியின் தனிப்பட்ட உரிமை என்றும், அதேநேரத்தில், கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும் என தலைமை உறுதியளித்ததாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தி

மேலும், காங்கிரஸைப் பொறுத்தவரை, கேரள முதலமைச்சர் தேர்வு என்பது இனி வெறும் மாநில அளவிலான நியமனம் மட்டுமல்ல; அது தேசிய அரசியல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு முடிவாகவும் அதிகளவில் பார்க்கப்படுகிறது. அதனால், அடுத்த கேரள முதலமைச்சரைத் தீர்மானிப்பதில் காங்கிரஸ் கடும் சவால்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, கோஷ்டிப் பூசல், கூட்டணி மேலாண்மை, மக்களவைத் தேர்தல், தேசிய அமைப்பு ரீதியான பரிசீலனைகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, அக்கட்சி முதல்வரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில், பார்க்கப்போனால் முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் பந்து காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடமே இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், அடுத்த 24 மணி நேரத்தில் முடிவு அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.