இந்தியா

“சபரிமலையில் வன்முறையை தூண்டுகிறது ஆர்எஸ்எஸ்”- பினராயி விஜயன்

“சபரிமலையில் வன்முறையை தூண்டுகிறது ஆர்எஸ்எஸ்”- பினராயி விஜயன்

rajakannan

சபரிமலையில் வன்முறையை தூண்டிவிட ஆர்எஸ்எஸ் முயன்று வருகிறது என கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தால் பிரச்னை நீடித்து வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கோயிலுக்குள் வர முயன்ற பெண்கள் நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளிலேயே இந்து அமைப்பினராலும், சபரிமலை பக்தர்களாலும் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சபரிமலையில் நடக்கும் பிரச்னைக்கு ஆர்எஸ்எஸ் தான் காரணம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த காலங்களில் ஆதிவாசிகள் மேற்கொண்டு வந்த பூஜை முறையை சங்க்பரிவார் தான் ஒழித்துக் கட்டியது எனக் குறிப்பிட்டுள்ள பினராயி விஜயன், சாதி மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கத்துடன் சபரிமலையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது ‌எனத் தெரிவித்துள்ளார். 

இந்தநிலை தொடர்ந்தால் சபரிமலையில் இருந்து பிற்படுத்தப்பட்டவர்கள் அகற்றப்படுவார்கள் என்றும், இதனை மத நம்பிக்கை உள்ளவர்கள் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். அனைத்து மதத்தினரும் வழிபாடு செய்யும் ‌வகையில் சபரிமலைக்கு என்று தனித்தன்மை‌ இருக்கிறது என்றும், அதை ஆர்எஸ்எஸ் எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொண்டதில்லை என்றும் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.