இந்தியா

வெள்ளத்தால் நிலைகுலைந்த கேரளா : ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட யானை உடல்!

webteam

கடும் நிலச்சரிவு மற்றும் கட்டுக்கடங்காத வெள்ளம் ஆகிய இரண்டும் கேரளாவை நிலைகுலையச் செய்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடுமையாக பெய்து வருகிறது. இதனால் கேரளாவின் இடுக்கி, வயநாடு, எர்ணாகுளம் ஆகிய பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்தப் பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் எர்ணாகுளத்தின் நேரியமங்கலம் பகுதியில் புரண்டு ஓடிய ஆற்று வெள்ளத்தில் யானையின் சடலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது காண்போரை கலங்கச் செய்தது.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலச்சரிவில், தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதி சிக்கிக்கொண்டது. இதில் சுமார் 80 பேரை காணவில்லை என்ற அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு மற்றும் வெள்ளம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். இடுக்கி மாவட்டத்தின் ராஜமலை பகுதிக்கு 50 பேர் கொண்ட வலிமை வாய்ந்த மீட்புப் படையினர் களமிறக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவர்களிடம் இரவு நேரத்திலும் மீட்புப் பணியில் ஈடுபடும் உபகரணங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.

இதுதவிர சமூக வலைத்தளமான ட்விட்டரில் பலரும் கேரள வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் காட்சிகள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். நெட்டிசன்களில் ஒருவரான ஸ்ரேயா என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், இதயம் களங்குவதாகவும், பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு இரங்கல்களையும் தெரிவித்துள்ளார்.

விஜு என்பவர் மூணாறு நிலச்சரிவு காட்சிகளை பகிர்ந்துள்ளார்.

ராகுல் மீனா என்பவர் முன்னாரின் நிலச்சரிவு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.