இந்தியா

துரத்திய காட்டு யானை; சாதுர்யமாக 8 கிமீ-க்கு பஸ்ஸை இயக்கிய டிரைவர்.. பரபர சேஸிங்!

JananiGovindhan

பஸ்ஸில் இருந்த பயணிகளின் உயிரை காப்பாற்றுவதற்காக ஆக்ரோஷமான காட்டு யானையின் துரத்தலில் இருந்து தப்பிக்க கிட்டத்தட்ட எட்டு கிலோமீட்டர் தொலைவுக்கு பேருந்தை சாதுர்யமாக பின்னோக்கியே இயக்கிய கேரள ஓட்டுநரின் செயல் பலரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது. இந்த நிகழ்வு குறித்த வீடியோ வெளியாகி காண்போரை விழிப்பிதுங்கச் செய்திருக்கிறது.

திருச்சூர் வழியாக சாலக்குடியில் இருந்து வால்பாறைக்கு கடந்த செவ்வாயன்று (நவ.,15) காலை 9 மணியளவில் சென்றிருக்கிறது தனியார் பேருந்து ஒன்று. அப்போது பேருந்து சென்ற வழி குறுகிய காட்டுப்பாதையாக இருந்ததிருக்கிறது. இதில் யானை இடையே வழிமறித்து நின்றதால் பேருந்தில் இருந்த 40 பயணிகளும் பீதியடைந்ததால் ஓட்டுநர் அம்புஜாக்‌ஷன் சாமர்த்தியமாக பேருந்தை பின்னோக்கி இயக்கியிருக்கிறார்.

பஸ் பின்னால் செல்வதை அறிந்து அந்த யானையும் துரத்தியிருக்கிறது. குறுகிய பாதையாக இருந்ததால் வேறு வழியின்றி அம்பலப்பராவில் இருந்து ஆனக்காயம் வரை சுமார் 8 கிலோ மீட்டருக்கு பயணிகளின் உதவியோடு பஸ்ஸை பின்னோக்கியிருக்கிறார் ஓட்டுநர் அம்புஜாக்‌ஷன். அரைமணிநேர போராட்டத்திற்கு பிறகு, யானை காட்டுக்குள் சென்றதும் பயணிகள் நிம்மதி பெருமூச்சு வாங்கியிருக்கிறார்கள்.

இந்த நிகழ்வுகள் அனைத்தையும் பேருந்தில் இருந்த பயணி ஒருவர் தனது மொபைலில் எடுத்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வலம் வந்துக்கொண்டிருக்கிறது.