இந்தியா

நாட்டிலேயே முதல்முறை: பேரவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கேரளாவில் தனிச் சேனல்!

JustinDurai
நாட்டிலேயே முதல்முறையாக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்து மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக தனியாக ஒரு தொலைக்காட்சி சேனலை தொடங்கியுள்ளது கேரள அரசு.
 
‘சபா டிவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சேனல் தொடக்க விழா நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா காணொலி மூலம் பங்கேற்று தொடங்கி வைத்தார். மேலும், சட்டமன்றத்துக்கான அதிகாரபூர்வ இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ‘’இது நம் மாநிலத்திற்கு மதிப்புமிக்க தருணம். மாநிலங்களவை, மக்களவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு தனியாக சேனல் இருக்கிறது. ஆனால் ஒரு மாநில சட்டமன்றம் சொந்தமாக சேனலைத் தொடங்குவது இதுவே முதல் முறை. ஜனநாயகத்தின் ஆட்சி நீடிக்கும் ஒரு இடத்தில் சட்டப்பேரவை நடவடிக்கைகளை மக்களுக்கு வழங்குவது முக்கியம். இது சட்டமன்றத்தின் செயல்பாட்டை இன்னும் வெளிப்படையானதாக மாற்ற உதவும்” என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், சபா டிவியில் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் தங்கள் தொகுதி குறித்து பேசவும், சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.