ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பான விசாரணைக்காக டெல்லி சிபிஐ முன்பு கார்த்தி சிதம்பரம் இன்று நேரில் ஆஜராகமாட்டார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ஏர்செல் நிறுவனம் அந்நிய முதலீடு பெற, விதிகளை மீறி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் ஒப்புதல் வழங்கியதாகவும் இதற்கு கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் உதவியதாகவும் சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் இன்று நேரில் ஆஜராகக்கோரி சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதற்கு அவரது வழக்கறிஞர் பதில் கடிதம் அளித்துள்ளார்.
அதில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்தி சிதம்பரம் சிபிஐ முன்பு ஆஜராகி முழு விளக்கம் அளித்துவிட்டதாகவும், புதிதாக தெரிவிக்க ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரை இன்றோ அல்லது மற்றொரு நாளோ நேரில் ஆஜராக வலியுறுத்த வேண்டாம் எனவும் கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து இன்றைய விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராகமாட்டார் என தெரிகிறது.