இந்தியா

திருமணமான பெண்ணை காதலிக்க வற்புறுத்திய இளைஞர் குத்திக் கொலை

ச. முத்துகிருஷ்ணன்

கர்நாடகாவில் திருமணமான பெண்ணை காதலிக்க வற்புறுத்திய இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பீதர் நகரில் சிங்கார்பாக் பகுதியை சேர்ந்த அமீர்கான் என்பவர், ஏற்கெனவே திருமணமான பெண்ணை காதலித்து வந்தார். இதனையடுத்து பெண்ணின் சகோதரர் ஜிஷான், அமீர்கானை பலமுறை எச்சரித்துள்ளார். அதை கண்டு கொள்ளாத அமீர்கான், அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஜிஷான் அமீர்கானை கத்தியால் குத்தி கொலை செய்தார். இச்சம்பவம் அமீர்கான் வேலை செய்த கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளில் ஜிஷான், அமீர்கான் வேலை செய்யும் கடைக்குள் நுழைந்து அமீரைக் கத்தியால் குத்தத் தொடங்குகிறார். கடையில் இருந்த ஒரு நபர் ஜிஷானை தடுக்க முயற்சிக்கிறார். ஆனால் கொலை செய்துவிட்டு ஜிஷான் கடையை விட்டு வெளியேறுகிறார். இதனையடுத்து ஜிஷானை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.