இந்தியா

சூட்கேசுக்குள் அடைத்து நண்பனை வீட்டிற்குள் கொண்டுவர திட்டம்: சிக்கிக்கொண்ட மாணவர்!

webteam

பெரிய சூட்கேசுக்குள் அடைத்து நண்பனை வீட்டிற்குள் கொண்டுவர திட்டமிட்ட கல்லூரி மாணவன் வசமாக சிக்கிக்கொண்டார்

ஊரடங்கு அமலில் உள்ளதாலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் பல அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் வெளிஆட்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. உறவினர்களாக இருந்தாலும் தற்போது அனுமதி இல்லை என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கர்நாடகாவில் தன் நண்பன் ஒருவரை வீட்டுக்குள் அழைத்துவர கல்லூரி மாணவர் நூதன திட்டத்தை கையாண்டு வசமாக சிக்கிக்கொண்டார். வெளிஆட்கள் அனுமதி இல்லை என்பதால் பெரிய சூட்கேசுக்குள் நண்பனை அடைத்த கல்லூரி மாணவர் தான் தங்கி இருக்கும் குடியிருப்புப் பகுதிக்குள் மெதுவாக இழுத்துச் சென்றுள்ளார்.

ஏதோ மர்மத்தை உணர்ந்த குடியிருப்புவாசிகள் சூட்கேசை திறக்கச் சொல்லியுள்ளனர். உள்ளே மடங்கிப் படுத்த நிலையில் இளைஞர் ஒருவர் இருந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனை அடுத்து இளைஞர்களின் பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை வழங்கி போலீசார் அனுப்பி வைத்தனர். இளைஞர்கள் இருவர் மீதும் எந்த வழக்கும் பதியப்படவில்லை.