இந்தியா

8 ஆண்டுகளாக முக்கிய கடிதங்களை வழங்காத தபால் ஊழியர் - கிராம மக்கள் அதிர்ச்சி

சங்கீதா

கர்நாடகா மாநிலத்தில் அஞ்சல் ஊழியர் ஒருவர் 8 ஆண்டுகளாக கிராம மக்களுக்கான கடிதங்களை விநியோகிக்காத தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொப்பல் மாவட்டம் கனககிரி தாலுகா கவுரிபுரா கிராமத்தில் ஒரு தபால் நிலையம் உள்ளது. இந்த தபால் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுளாக சாகேப் என்பவர் தபால்காரராக பணியாற்றி வருகிறார். கவுரிபுரா, பசரிஹாலா, பைக்கலம்புரா, தேவலாபுரா ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வரும் கடிதங்களை அவர்களிடம் வழங்குவது தான் சாகேப்பின் வேலை.

ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக கிராம மக்களுக்கு வந்த ஆதார் கார்டுகள், பான் கார்டுகள், ஏ.டி.எம். கார்டுகள், அரசு வேலைக்கான பணி நியமன ஆணை உள்ளிட்ட கடிதங்களை கிராம மக்களுக்கு சாகேப் விநியோகம் செய்யாமல் இருந்து உள்ளார். இதுகுறித்து கிராம மக்கள் கேட்டால் உங்களுக்கு கடிதமே வரவில்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் கிராம மக்களுக்கு வந்த ஆதார் கார்டுகள், பான் கார்டுகள், அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி கிராமத்தில் ஒரு இடத்தில் சாகேப் வைத்திருந்தார். அந்த சாக்கு மூட்டையை அங்கு விளையாடிய சிறுவர்கள் பிரித்து விட்டனர்.

அப்போது சாக்கு மூட்டைக்குள் ஆதார் கார்டுகள், பான் கார்டுகள், அரசு வேலை பணி நியமன ஆணைகள் இருந்தது தெரியவந்தது. இதுபற்றி அறிந்த கிராம மக்கள் சாகேப்பால் தங்களுக்கு அரசு சார்பில் கிடைக்க வேண்டிய பயன்கள் கிடைக்காமல் போய் விட்டது என்றும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு கோாிக்கை விடுத்து உள்ளனர்.